நவராத்திரி என்பது நம்மூரில்
கொண்டாடப்படும் தேவி பண்டிகையைக் குறிக்கும் சொல் அல்ல.
‘ 9 நாட்கள்’ என்பதன் சமஸ்கிருத மொழிபெயர்ப்பு.
போன
வாரமே பெரு நாட்டில்
என் குடும்பத்தோடு செலவழித்த
9 நாட்கள்
விடுமுறையைப் பற்றி எழுதப்போகிறேன் என்று எச்சரித்திருக்கிறேன்.
3 /4 பகுதிகளாக எழுதப்போகும்
அந்தத் தொகுப்பின் முதற் பகுதி இதோ:
பயணக்
கட்டுரை எழுதுவது இதுதான் என்னுடைய கன்னி (maiden attempt) முயற்சி.
இத்தனை
ஆண்டுகளில் நான் படித்த பயணக் கட்டுரைகள் இரண்டுதான்—அதுவும் “தசரதர் ஆண்ட காலத்தில்”—அதாவது long long
ago—ஒன்று, தேவன் ஆனந்த விகடனில் எழுதிய “5
நாடுகளில் 50 நாள்கள்.” இரண்டாவது,
பாஸ்கரத் தொண்டைமான் எழுதிய “வெங்கடம்முதல்
குமரிவரை”. நானே படிக்காத பயணக் கட்டுரைகளை மற்றவர்களின்
மேல் திணிப்பது மனதுக்கு ஒவ்வாத விஷயம்தான்.
இருந்தும், நான்
எழுதத் துணிந்ததற்குக் காரணம் நான் விஜயம் செய்த
தென் அமெரிக்கக் கண்டம் இந்திய
மக்களுக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாத கண்டம் என்று என்னுள் எழுந்த
ஒரு கணிப்பு.