Tuesday, May 14, 2013

அம்மாவும் நானும் - ஒரு flashback









மே மாதம் 12ஆம் தேதி - 
அன்னையர் தினம் (Mother'sDay). 
ஒவ்வொரு வருடமும் மே மாதம் 
இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையை 
அன்னையர் தினமாக உலகத்தினர் 
கொண்டாடிவருகின்றனர்.
இதன்ஆரம்பம்,
நூறாண்டுகளுக்குமுன் - 
1907இல் அமெரிக்காவில் 
Anna Javis,Julia Ward Howe 
என்ற இரண்டு பெண்மணிகளுக்குத் 
தாய்மையையும் தாய்மார்களையும் 
நினைவுகூர ஒரு நாள் 
ஒதுக்கப்பட வேண்டும் 
என்ற யோசனை தோன்றியது. 
அந்தச் சின்ன விதை
இன்று ஒரு பெரிய மரமாக வளர்ந்து
இன்று கிட்டத்தட்ட 50 நாடுகளுக்கு 
மேல் இந்த யோசனையை ஏற்றுத் 
தாய்மார்களைக் கெளரவிக்க 
தொடங்கியுள்ளார்கள்.
1914இல் அமெரிக்க ஜனாதிபதி
உட்ரோ வில்ஸன் இதை 
ஒரு விடுமுறை நாளாக அறிவித்து 
அதற்கு  ஒரு விசேஷ 
அந்தஸ்த்தைக் கொடுத்தார்.
அன்னையரை ஞாபகப்படுத்திக் 
கெளரவிக்கும் நாளாக ஆரம்பித்த 
விழாஇன்று அமெரிக்காவிலேயே 
ஒரு சாதனை படைத்த வர்த்தக 
நிகழ்வாக ஆகிவிட்டது. 
ஒரு சின்ன புள்ளி விவரம் - 
போன வருடம் அமெரிக்கர்கள் 
அன்னையர் தினத்தன்று 
செலவழித்த டாலர்கள்
புஷ்பங்கள் - $ 2.6 பில்லியன்.
பரிசுப் பொருள்கள் - $ 1.53 பில்லியன்.
வாழ்த்து அட்டைகள் - $ 68 மில்லியன்.
இதைத் தவிர, நகைகளுக்காகச் 
செலவு செய்தது தனி. 
Anna Javis இதை 
எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 
அவர்கள் நோக்கம், 
தாய்மையைக் கெளரவப்படுத்த 
வேண்டிய அவசியத்தினால். 
அமெரிக்க வாழ்க்கையைப் 
பற்றி அறிந்தவர்களுக்கு 
அங்கே கூட்டுக் குடும்பம் 
என்ற concept கிடையாது 
என்பது தெரிந்திருக்கும்.
மகனோ, மகளோ 18 வயது 
ஆனபின் சுதந்திரப் பறவைகளாக 
வீட்டை விட்டு சுயேச்சை 
வாழ்க்கையைத் 
தேர்தெடுப்பார்கள். 
பெரியோர்களின் தொடர்பு 
அவ்வளவாக இருக்காது. 
இந்தச் சூழ்நிலையில்தான் 
Mother's Day, Father's Day,  
என்று ஆரம்பித்தார்கள்.
இந்தநாகரீகம்,மேல்நாடுகளில் 
பரவ ஆரம்பித்தது ஆச்சரியமான 
விஷயம் இல்லை. 
கூட்டுக் குடும்பம் என்ற வட்டத்தில் 
வாழும் இந்தியா,சீனா, ஜப்பான் 
போன்ற நாடுகளும் இதைப் 
பின்பற்ற ஆரம்பித்ததுதான் 
ஒரு விந்தையான விஷயம்.
மேல்நாட்டுக் கலாச்சாரங்கள் 
பலவற்றைச் சமீபக் காலமாகத் 
தனதாக்கிக்கொண்ட இந்தியா
இந்த Mother's Dayஐயும் 
பின்பற்ற ஆரம்பித்தது 
ஆச்சரியப்பட வேண்டிய 
விஷயம் இல்லை. 
கொஞ்சம் நெருடலான 
சமாச்சாரம்தான்.
அன்னைதான் எல்லாம்என்று 
சின்ன வயதிலிருந்து 
சொல்லப்பட்ட 
தாரக மந்திரம். 
புராண இதிகாசங்களிலிருந்து 
கதைகள், நாடகங்கள்
கவிதைகள் வரை 
தாய்மையையும் தாயாரையும் 
பற்றி எழுதி, பேசி வந்திருக்கிறார்கள்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாய் சொல்லைத் தட்டாதே
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தாயில்லாமல் நான் இல்லை
மாத்ரு தேவோ பவ
என்று உபதேச மொழிகளினால் 
சிறுவர் சிறுமியர் brainwash 
செய்யப்பட்டிருக்கின்றனர். 
அப்படிபட்ட கலாச்சாரத்திலா
ஒரே ஒரு நாள் மட்டும் 
தாயாரை நினைவுகூருங்கள் 
என்று கொண்டாடுவது?
கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் 
இதுவும் ஒரு நன்மைக்குத்தான். 
சமீப காலங்களில் மீடியாக்களில் 
அதிகம் பேசப்படும், எழுதப்படும் 
விஷயம் - 
"பெண்கள் கொடுமை" 
(Women Abuse) பற்றித்தான். 
இதில் Mother Abuseம் அடங்கும்.
கடவுளுக்குச் சமமாக வணங்க 
வேண்டிய தாயாரை 
வருடம் முழுவதும் 
கொடுமைசெய்துவிட்டு 
அதற்குப் பிராயச்சித்தமாக 
ஒரு நாள் "Sorry,I love you" 
என்று பரிசு கொடுத்து 
அன்னையைக் கெளரவிக்கும் 
நாளை வரவேற்க வேண்டியதுதான்.

டி.வி.யில் பிரபலங்கள் 
தங்கள் தாய்மார்களைப் பற்றிப் 
பேசுவதைக் கேட்கும்போது 
நெகிழ்வாகவும் 
சந்தோஷமாகவும் இருக்கிறது. 

நானும் என் பங்கிற்கு 
இந்த அன்னையர் தினத்தில் 
என் தாயாரைப் பற்றிச் 
சில வரிகள் எழுதலாம் 
என்று நினைக்கிறேன்.
என் தாயார் பெயர் - சுந்தரி.
வாழ்ந்த காலம் - 1911-2003  
92 வயது.